பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் ஜெயலலிதா எந்த விமானத்தில் வந்தாரோ அதே விமானத்திலேயே அவர் சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமீன் உத்தரவு பெங்களூர் சிறை அதிகாரிகள் கைகளுக்கு இன்று வந்து சேரவில்லை. நாளைக்குதான் ஜாமீன் உத்தரவு ஜெயில் அதிகாரிகள் கைக்கு வந்து சேர உள்ளது. எனவே ஜெயலலிதாவால் இன்று ரிலீஸ் ஆக முடியாது.

இருப்பினும் பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் அவருக்காக சிறப்பு விமானம் தயார் நிலையில் காத்திருக்கிறது. கடந்த மாதம் 27ம்தேதி தீர்ப்பு தேதியன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பெங்களூருக்கு தனி விமானத்தில் வந்தார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் வந்தனர். அந்த விமானம் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலமாக பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கோர்ட்டுக்கு ஜெயலலிதா வந்தார்.
இதன்பிறகு சிறப்பு விமானம் எச்.ஏ.எல் விமான நிலையத்திலேயே தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த விமான நிலையம் விஐபிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் தொந்தரவு ஏற்படவில்லை. எனவே விமானத்தை நிறுத்தி வைக்க எதிர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா ரிலீஸ் ஆனதும், சனிக்கிழமை அதே விமானத்தில் சென்னை திரும்ப உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications