சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஏற்பு
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி நியமனம் விவகாரத்தில் எதிர்மனுவை தாக்கல் செய்ய ஜெயலலிதாவுக்கு 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய நீதிபதியாக மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.
ஆனால் புதிய நீதிபதி நியமனத்தில் கர்நாடக அரசு சரியான விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் செல்லமேஸ்வர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா ஷெனாய், நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதால் புதிய நீதிபதி ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டார். இந்த நியமனம் முறைப்படி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் சர்மா, கர்நாடக அரசின் பதில் மனு மீது தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் தேவை என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பின் பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.