ஜெ... இன்றைக்குள் வந்தால் வெளியில் தீபாவளி.. இல்லாவிட்டால் ஜெயிலுக்குள் கொண்டாட வேண்டியதுதான்!
டெல்லி: இன்றைக்குள் ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் தீபாவளியை ஜெயலலிதா வெளியில் கொண்டாடலாம். அதிமுகவினருக்கும் சந்தோஷம் கிடைக்கும். அப்படி கிடைக்காமல் போனால், பெங்களூர் சிறைக்குள்தான் இந்த வருட தீபாவளியை அவர் கொண்டாட வேண்டி வரும். அதிமுகவினரும் சோகத்துடன் தீபாவளியை கொண்டாட வேண்டியதுதான்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு என்ன என்பதை அறிய ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்துள்ளது.
இன்றைக்குள் ஜாமீன் கிடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜெயலலிதா உள்ளார். காரணம், நாளை முதல் உச்சநீதிமன்றத்திற்கு தீபாவளி விடுமுறை வருகிறது. 26ம் தேதி வரை விடுமுறையாகும். எனவே இன்று ஜாமீன் கிடைக்காவிட்டால் இந்த மாதக் கடைசியில்தான் ஜெயலலிதா ஜாமீன் குறித்து யோசித்தே பார்க்க முடியும்.
செப்டம்பர் 7ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அன்றே அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார் ஜெயலலிதா. முதலில் அந்த மனு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 3வது முறை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளார் ஜெயலலிதா. அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் கோரி மனு போட்டுள்ளனர்.
இன்று அதிமுகவின் 43வது பிறந்த நாளாகும். இந்த நாளில் ஜெயலலிதா சிறையில் இருப்பது அதிமுகவினரை வருத்தமடைய வைத்துள்ளது. இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்தால் இரட்டிப்புசந்தோஷத்துடன் அதிமுக நிறுவன தினத்தைக் கொண்டாட அக்கட்சியினர் ஆவலுடன் காத்துள்ளனர்.