உ.பியில் உருவாகிறது முலாயம் சிங் யாதவ்- நிதீஷ்குமார் கூட்டணி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைக்க இருக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பீகார், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தேர்தலை சந்தித்தன. இதனால் பாஜகதான் பெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியையும் பிடித்தது.
இடைத்தேர்தலில் வெற்றி
இதனைத் தொடர்ந்து பீகாரில் 20 ஆண்டுகாலம் எதிரும் புதிருமான இருந்த நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் கைகோர்த்தனர். இதனால் சட்டசபை இடைத்தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மாயா- முலாயம் கூட்டணி
இந்த வெற்றியைப் போல பாஜகவை வீழ்த்த உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும் முலாயம்சிங்கும் கை கோர்க்க வேண்டும் என்று லாலு பிரசாத் கோரிக்கை விடுத்திருந்தார். முலாயம்சிங்கும் மாயாவதியுடன் கூட்டணி அமைக்க தயாராக இறங்கி வந்தார். ஆனால் மாயாவதி பிடிகொடுக்கவில்லை.
சமாஜ்வாடி கூட்டணியில் சரத் யாதவ்
இந்த நிலையில் லக்னோவில் நேற்று நடைபெற்ற சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
உருவாகிறது புதிய கூட்டணி?
இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங்கின் சமாஜ்வாடி-ஐக்கிய ஜனதா தளம் இடையே புதிய கூட்டணி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
முலாயம் பால்யகால நண்பர்
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், முலாயம் சிங் யாதவ் என் பால்ய கால நண்பர். வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், எங்களின் நட்புதொடருகிறது. அவர் அழைப்பு விடுத்ததன் காரணமாகவே இந்த கூட்டத்துக்கு வந்தேன் என்றார்.