ஜார்க்கண்ட்: ஜல்ஜீவன் திட்ட முறைகேடு-ராஞ்சியில் ஒரே நாளில் 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!
ராஞ்சி: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்தது தொடர்பாக சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் டிசம்பர் 29-ந் தேதி முடிவடைகிறது. இதற்கு முன்னதாக மாநில சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. கடந்த சில தேர்தல்களில் தனித்தே அதிகமான இடங்களில் பாஜக போட்டியிட்டு வந்தது. இந்த முறை பாஜக கூட்டணியில் மத்திய அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளும் ஜார்க்கண்ட்டில் போட்டியிடுவோம் என அடம் பிடிக்கின்றன. ஜார்க்கண்ட்டில் மொத்தம் உள்ள 81 இடங்களில் 40 இடங்களை கூட்டணி கட்சிகளே கேட்டு வருவதால் பாஜக கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை உதறி தள்ளவும் முடியாமல் அவை கேட்கும் இடங்களைத் தரவும் முடியாமல் பாஜக தத்தளித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் எனப்படும் குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் மிதிலேஷ் குமாரின் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சனுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இந்த சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஜார்க்கன்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த அதிரடி சோதனை அம்மாநில தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications