சுதந்திர தின உரையின்போது மயங்கிய ஜார்க்கண்ட் ஆளுநர்- சோர்வினால் வந்த மயக்கம்!
தும்கா: ஜார்க்கண்ட் மாநில துணை தலைநகரமான தும்காவில் கொடி ஏற்றத்தின் போது அம்மாநில ஆளுநர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் நேற்று சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநில தலைநகரங்களில் நடந்த விழாவில் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தனர்.
இவ்விழாவில், ஜார்கண்ட் மாநிலத்தின் துணை தலைநகரமான தும்காவில் நடந்த விழாவில் அந்த மாநில ஆளுநர் சையது அகமது, தேசிய கொடி ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றிக் கொண்டிருந்தார்.
மயங்கி விழுந்த ஆளுநர்:
அப்போது, சோர்வுடன் காணப்பட்ட அவர் பாதி உரையாற்றி முடிந்தபோது திடீரென்று மயக்கம் அடைந்து சாய்ந்தார்.
தாங்கிப் பிடித்த அதிகாரிகள்:
இதனை பார்த்த அருகில் நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தாங்கிப் பிடித்தபடி இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் உடனடியாக சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
உரையை தொடர்ந்த கமிஷனர்:
அதே வேளையில் கவர்னர் பாதியில் விட்ட உரையை, மேடையில் இருந்த சந்தல் பர்கானா மாவட்ட கமிஷனர் எதேஷ்முல் ஹக் படித்து முடித்தார்.
எந்த பாதிப்பும் இல்லை:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் சையது அகமதுவுக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி, சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. அவை சரியாக இருந்ததால் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சோர்வினால் மயக்கம்:
அவர் காலையில் வழக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகள் சாப்பிடாததால் சோர்வடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பதற்றமாக்கிய மயக்கம்:
சிறிது நேர ஓய்வுக்குப்பின் ஆளுநர் விமானம் மூலம் தலைநகர் ராஞ்சிக்கு சென்றார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.