தவித்த நோயாளி! கண்கலங்கிய மனைவி!ரத்ததானம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்! ஜார்கண்டில் நெகிழ்ச்சி!
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு விழாவுக்காக சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார்.
இவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பன்னா குப்தா உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
நுபுர்சர்மாவை சாடிய உச்சநீதிமன்றம்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் என்ன சொன்னார் தெரியுமா?
அரசு மருத்துவமனையில் அமைச்சர்
இந்நிலையில் அமைச்சர் பன்னாகுப்தா, எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, மற்றும் சிடி ஸ்கேன் உபகரணங்கள் இருந்த கட்டத்தை திறந்து வைத்தார். பிறகு மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து அம்சங்களையும் அவர் ஆய்வு செய்து வந்தார். அவருடன் துறை அதிகாரிகள் இருந்தனர்.
கண்ணீர் சிந்திய பெண்
அப்போது கலிகாபூர் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சர் பன்னா குப்தாவை சந்தித்தார். அப்போது, ‛‛எனது 49 வயது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. ரத்ததானம் செய்யும்படி நான் பலரிடம் கேட்டேன். இன்னும் எனது கணவருக்கு ரத்தம் கிடைக்கவில்லை. இதனால் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.
ரத்ததானம் செய்த அமைச்சர்
இதை கேட்ட அமைச்சர் பன்னா குப்தா கணவரின் ரத்த குரூப்பை கேட்டார். அப்போது அந்த பெண்ணின் கணவரின் ரத்த குரூப்பும், அமைச்சர் பன்னா குப்தாவின் ரத்த குரூப்பும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து அவரே ரத்தம் கொடுக்க முன்வந்தார். அமைச்சர் பன்னா குப்தாவிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது.
கடமையை தான் செய்தேன்
பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் முதலில் மனிதன். அதன்பிறகு தான் எனது பதவி எல்லாம். ஒரு தங்கையின் கணவரை காப்பாற்ற நான் செய்ய வேண்டிய கடமையை தான் செய்தேன்' என்றார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் இவர் காரில் ராஞ்சியில் உள்ள சட்டசபைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிரைகிலா-கார்ஸ்வான் மாவட்டம் துல்மி சாலையில் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிருக்கு போராடினர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.