பெங்களூரு கிறிஸ்து ஜயந்தி கல்லூரியில் ஜனதர்ஷன் புத்தக கண்காட்சி
பெங்களூரு: பெங்களூரு கிறிஸ்து ஜயந்தி கல்லூரியில் "ஜனதர்ஷன்" தலைப்பில் வெகுவிமர்சையாக புத்தக கண்காட்சி நடைபெற்றது.
பெங்களூரு கிறிஸ்து ஜயந்தி கல்லூரியானது கடந்த ஆண்டு இந்தியா டுடே- நீல்சன் நிறுவனம் நடத்திய சர்வேயில் 16-வது சிறந்த காமர்ஸ் கல்லூரியாகவும் 22-வது சிறந்த அறிவியல் கல்லூரியாகவும் 24-வது சிறந்த கலைக் கல்லூரியாகவும் தேர்வானது. அகில இந்தியவில் இத்துறைகளில் டாப் 10 கல்லூரிகளில் 3,4,5-வது இடங்களையும் இக்கல்லூரி பெற்றிருந்தது.
இந்த கல்லூரியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக ஒன் இந்தியா கன்னட இணையதளத்தின் ஆசிரியர் எஸ்.கே ஷாமா சுந்தர் பங்கேற்றார். இக் கண்காட்சியில் 12-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்றன.
இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.கே ஷாமா சுந்தர், மாணவர்கள் எப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மிக எளிதாக உதாரணங்களுடன் விளக்கினார். மேலும், தற்போது ஒரு டிஜிட்டல் மீடியாவின் எடிட்டராக இருக்கும் நிலையில் புத்தக கண்காட்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். ஒருகாலத்தில் புத்தகப் புழுவாக இருந்தேன்... தற்போது புத்தகங்கள் படிப்பதையே நிறுத்திவிட்டேன். எல்லா நேரமும் இணையத்திலேயே செய்திகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது ஏதேனும் ஒரு புத்தகத்தை எழுத நினைத்தாலும் ஃபேஸ்புக்கில் சுயசரிதையாகவோ அல்லது ட்விட்டரில் 140 வார்த்தைகளிலோதான் எழுத முடியும் எனவும் நகைச்சுவையாகவும் குறிப்பிட்டார்.
மேலாண்மை, பொறியியல் தொழில்நுட்பம், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்ற்ருந்தன. தங்களது பாடங்களுக்கேற்ற புத்தகங்களை தேர்வு செய்வதில் மாணவர்கள் அலைமோதியதையும் பார்க்க முடிந்தது.