சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது - பதிவிட்ட இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
மாட்டுச்சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
இம்பால்: மாட்டுச்சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட மணிப்பூர் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த மணிப்பூர் பாஜக தலைவர் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவமானப்படுத்தும் விதமாக பதிவிட்டதாக பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் திக்கேந்திர சிங். கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திக்கேந்திர சிங் கடந்த 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திர வாங்கெம். இவர் தனது முகநூலில் பல வீடியோக்கள் மற்றும் செய்திகளை பகிர்வதை வழக்கமாக கொண்டவர். கொரோனா பாதிப்பால் பாஜக தலைவர் திக்கேந்திர சிங் உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர் கிஷோர் சந்திர வாங்கேம் என்ற பத்திரிக்கையாளரும், எரேந்திரோ லிசோம்பம் என்ற சமூக செயற்பாட்டாளரும் தங்கள் முகநூல் பக்கங்களில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர்.
பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திர வாங்கேம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாட்டுச்சாணமும், மாட்டுகோமியமும் கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யாது. ஆதாரமற்ற வாதங்கள். நாளை நான் மீன் சாப்பிடப்போகிறேன். ஆழ்ந்த இரங்கல் RIP என பதிவிட்டிருந்தார்.
அதே போல சமூக செயற்பாட்டாளரான எரோந்திரோ லிசோம்பம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான மருந்து மாட்டுச்சாணம் மற்றும் மாட்டு கோமியமும் அல்ல. கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து அறிவியல் மற்றும் பொதுஅறிவு. பேராசிரியரே ஆழ்ந்த இரங்கல் RIP என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து மணிப்பூர் மாநில பாஜக சார்பில் இருவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் கிஷோர் சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரின் சமூகவலைதள பதிவுகள் பாஜக மாநில தலைவர் திக்கேந்திர சிங் கொரோனாவால் உயிரிழந்ததை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரையடுத்து கிஷோர் சந்திர வாங்கோம் மற்றும் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரையும் இம்பால் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதே பதியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டுச்சாணமும், சிறுநீரும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடியையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் விமர்சித்ததாக கிஷோர் சந்திர வாங்கோம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.