மேற்கு வங்கத்தில் குண்டர்கள் ஆட்சி... மம்தாபானர்ஜி ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஜே.பி.நட்டா..!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குண்டர்கள் ஆட்சி நடைபெறுவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி இழந்துவிட்டார் என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி தான் மேற்கு வங்கத்தில் அமையும் எனவும் ஜே.பி.நட்டா உறுதிபடக் கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள சென்ற ஜே.பி.நட்டா மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தான் காரணம் என பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் குண்டர்கள் ஆட்சி நடப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், ஆயிரம் தடைகள் இருப்பினும் அதனை உடைத்தெறிந்து சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம் என நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மம்தா ஆட்சிக்கு நாட்கள் நெருங்கிடுச்சி.. துர்காதேவிதான் என்னை காத்தார்.. ஜே பி நட்டா
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே மேற்கு வங்கத்தில் பாதுகாப்பற்ற நிலை உள்ள போது சாமானியர்களின் நிலையை பற்றி தாம் சொல்லவே தேவையில்லை என கூறியிருக்கிறார். மம்தா பானர்ஜி ஆட்சியில் ஜனநாயகமே கிடையாது என்றும் இதுவரை 130 பாஜக தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மம்தாவின் ஆட்சியை தூக்கி எறிவதற்கான காலம் வந்துவிட்டதாகவும் மத்திய அரசு கொடுத்த அனைத்து நிவாரண நிதிகளிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதனிடையே ஜே.பி.நட்டாவுக்கு பதிலடி கொடுத்துள்ள மம்தா பானர்ஜி, பாஜக வழக்கம் போல் இப்போது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளதாகவும், விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் ஸ்டேஜ் பிளே செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.