சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எச்.எல்.தத்து
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் 42வது தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம்.லோதா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அதையொட்டி முன்னதாகவே சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக 63 வயது எச்.எல்.தத்துவை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.
அதன்படி, ஆர்.எம்.லோதா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக எச்.எல்.தத்து பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழா நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகை தர்பார் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத்தலைவர் அமீது அன்சாரி, டெல்லி ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், வெங்கையா நாயுடு, அனந்த்குமார், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.எம்.லோதா, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள், ஹைகோர்ட் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
42வது தலைமை நீதிபதி...
புதிதாக பதவியேற்றுள்ள எச்.எல். தத்து சுப்ரீம் கோர்ட்டின் 42-வது தலைமை நீதிபதி ஆவார். இவர் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி முடிய 14 மாத காலத்திற்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு...
தற்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கு விசாரணையை கண்காணிக்கும் அமர்வின் தலைவராக தத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு...
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எச்.எல்.தத்து, 1950-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஹந்த்யலா லட்சுமிநாராயணசாமி தத்து.
வக்கீலானார்...
வக்கீல் படிப்பை முடித்து, கடந்த 1975-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்ட தத்து, பெங்களூரில் சிவில், கிரிமினல், வரி மற்றும் அரசியலமைப்பு முதலிய வழக்குகளில் பயிற்சி எடுத்தார்.
ஹைகோர்ட் தலைமை நீதிபதி...
1983-ம் ஆண்டு முதல் கர்நாடக ஹைகோர்ட்டில் பல்வேறு வழக்குகளுக்கு ஆஜரான தத்து, விற்பனை வரித்துறைக்கு அரசு வக்கீலாகவும் பணி புரிந்துள்ளார். கடந்த 1995-ல் கர்நாடக மாநில ஹைகோர்ட் நீதிபதியாக பதவியேற்ற தத்து, 2007-ம் ஆண்டு சத்தீஷ்கார் மாநில ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி...
கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தத்து, இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.