ஜாமீனில் வெளியே வந்த கன்யாகுமார், ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்யாகுமார் இன்று சந்தித்து பேசினார்.
தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அப்சலுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து. இதனையடுத்து தேச விரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கன்யாகுமார் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கன்யா குமார் இன்று சந்தித்தார்.
கன்யா குமார் கைது செய்யப்பட்ட பின் அவரை விடுதலை செய்ய நீதி வேண்டும் என கூறி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி பேரணியும் நடத்தியிருந்தார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மாணவர்கள் மீதான வழக்கு குறித்து விவாதிப்பதற்காகவும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.