தமிழக முதல்வரை இழிவுபடுத்துகிறதா கன்னட திரைப்படம் 'ஜெய்லலிதா'- சர்ச்சையால் பரபரப்பு!!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கன்னடத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக வெளியான சர்ச்சையால் பரபரத்து கிடக்கிறது கர்நாடகா. ஏற்கனவே தண்ணி பிரச்சினை, இதுல இதுவேறையா, என வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கின்றனர் பெங்களூர் வாழ் தமிழர்கள்.

போஸ்டரை பார்த்தாலே சந்தேகம்
இந்திரா புரொடக்ஷன் தயாரிப்பில் பி.குமார் இயக்க, நகைச்சுவை நடிகர் சரண் நடித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் ஒரு திரைப்படம் வெளியானது. இதுதான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம். சாலையோர சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த படத்தின் போஸ்டர்களில் படத்தின் பெயரை படித்து பார்த்தவர்களுக்கு இது தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிய கதையோ என்ற சந்தேகம் எழுந்திருக்காமல் இருக்காது.

கோர்ட்டில் வழக்கு
ஏனெனில், அந்த படத்தின் பெயர் 'ஜெய்லலிதா'. அதிலும் ஒரு பெண்ணை பிரதானமான காண்பித்தபடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் இந்த சந்தேகம் மேலும் வலுத்தது. இந்த போஸ்டர்களை பார்த்து அதிர்ச்சியான சசிகுமார் என்ற வக்கீல், கடந்த மாதம் 18ம்தேதி பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் "இந்தியாவின் மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவர், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவரது பெயரை சூட்டிய படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

தடை விதிக்க நீதிபதி மறுப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தரசாங்கி, திரைப்படத்தை, போட்டு காண்பிக்கச் சொல்லி பார்த்தார். இதையடுத்து வழங்கிய தீர்ப்பில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றியோ, அவர்மீதான வழக்குகள் பற்றியோ இந்த படத்தில் காட்சிகள் இல்லை. இருப்பினும், படம் ஆரம்பிக்கும் முன்பாக, இந்த படத்தில் வருபவை அனைத்தும் கற்பனை கதாபாத்திரங்கள், யாரையும் களங்கப்படுத்தவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்து படத்தை வெளியிடலாம்" என்று தீர்ப்பளித்தார்.

வெற்றிகரமாக முதல் வாரத்தில்..
இதன்பிறகே, கடந்த 27ம்தேதி திரைப்படம் திரைக்கு வந்தது. படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. ஒரு நாடக கம்பெனியை நடத்தும் தந்தையை, மகன் கதாபாத்திரமான ஜெய் கடத்திச் செல்கிறார். தனது தந்தையை மீட்க மகள் கதாபாத்திரமான லலிதா முயற்சிகள் எடுக்கிறார். இதுதான் படத்தின் கதை. ஜெய் மற்றும் லலிதா (பெண் வேடம்) ஆகிய இரு வேடங்களிலும் நகைச்சுவை நடிகர் சரண் நடித்துள்ளார். ஜெய் மற்றும் லலிதா ஆகிய இரு கதாப்பாத்திரங்களின் பெயர்களை இணைத்து, 'ஜெய்லலிதா' என்று படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இது மலையாள திரைப்படமான மாயமோகினியின் ரீமேக்தான்.

பத்திரிகை விளம்பரம் படுத்திய பாடு!
இருப்பினும், படத்தின் பெயரை பார்த்துவிட்டு சசிகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், பெங்களூரில்தான் வசித்து வருகிறார். தீவிரமான அ.தி.மு.க விசுவாசி என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெய்லலிதா, என்று பெயரிட்ட தலைப்பில், காமெடி நடிகர், பெண் வேடமிட்டு அரைகுறை ஆடை அணிந்து போஸ் கொடுத்த விளம்பரங்களை கடந்த மாதம் கன்னட பத்திரிகைகளில் பார்த்தேன். திரைப்பட விளம்பரத்துக்காக 'அம்மாவின்' பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் குறுகிய நோக்கத்தில் இந்தப் படத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துதான் இந்த வழக்கை தொடர்ந்தேன்" என்றார்.

அந்த எண்ணம் இல்லை..
இதுகுறித்து படத்தின் இயக்குநர் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தப் படம் முழுக்க, முழுக்க வணிக அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் கதைக்கு ஏற்றவாறு பெயர் வைத்திருக்கிறோம். படத்தை முழுமையாக நீதிபதி பார்த்தார். படத்துக்கும், தமிழக முதல்வருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். எனக்கோ, என் குழுவினர்களுக்கோ யாரையும் புண்படுத்தும் நோக்கம் சற்றும் கிடையாது" என்றார்'.












Click it and Unblock the Notifications