கான்பூர் ஐஐடியில் 3 மாதத்தில் 3 மாணவர்கள் தற்கொலை
கான்பூர்: கான்பூர் ஐஐடியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தனது அறையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ரய்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(20). போலியோவால் பாதிக்கப்பட்ட அவரின் கால்கள் செயல் இழந்துவிட்டன. அவர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடியில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தனது அறையில் பிணமாகக் கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கல்லூரியின் பதிவாளர் ஆர்.கே. சச்சான் கூறுகையில்,
மஞ்சுநாத்தின் தந்தை அவர் சிறுவனாக இருக்கையிலேயே இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது சகோதரியும் இறந்துவிட்டார். மஞ்சுநாத்தின் அறையில் விஷத் தன்மை கொண்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விஷத்தால் இறந்திருக்கக்கூடும் என்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து அவரது தாய்க்கு தெரிவித்துள்ளோம். மேலும் இது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மஞ்சுநாத் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கான்பூர் ஐஐடியில் படித்த ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 1ம் தேதி அதே கல்லூரியில் படித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.