கிங்-காக இருப்பேன்... கிங் மேக்கராக அல்ல... சித்தராமையாவை தோற்கடிப்பேன்... குமாரசாமி சபதம்
நான் கிங்காகதான் இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்க மாட்டேன் என்று கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூர்: நான் கிங்காகதான் இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்க மாட்டேன். எப்படியும் சித்தராமையாவை தோற்கடித்தே தீருவேன் என்று கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், கௌடாவின் மகனுமான குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 12-ஆம் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது.
அமித் ஷாவும், ராகுல் காந்தியும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவுக்கு பெருத்த தோல்வி
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. அதே சமயம் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்றும் அந்த கணிப்புகள் தெரிவித்துள்ளன.
குமாரசாமி மறுப்பு
அதாவது பெரும் தொகுதியில் வெற்றி பெறும் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஏதாவது ஒரு கட்சி அரியணை ஏறும் என்பதுதான் அந்த கிங் மேக்கர் என்பதன் பொருள். ஆனால் இந்த கருத்து கணிப்புகள் பொய்யானவை என்று குமாரசாமி மறுக்கிறார்.
ஒன்றும் நடக்காது
சித்தராமையாவை தோற்கடித்தே தீர வேண்டும் என கங்கணம் கட்டியுள்ள குமாரசாமி, சாமுண்டீஸ்வரி தொகுதியில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு குமாரசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ராமநாகரா மற்றும் சென்னபட்டினத்தில் ஒரு மாதமாக சித்தராமையா பிரசாரம் செய்தாலும் ஒன்று நடக்காது. நாங்கள்தான் ஜெயிப்போம்.
எங்கள் கட்சிக்கு முடிவு கட்ட
இந்த முறை அவரை தோற்கடித்தே தீருவோம். அவர் போட்டியிடும் சாமுண்டீஸ்வர் மற்றும் பாதாமி தொகுதிகளில் அவரை தோற்கடிப்போம். அவர் தன்னலம் சார்ந்த ஒரு தலைவர். எங்கள் கட்சியை அழிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சரியானவை அல்ல. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் மற்றும் பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட கணிப்புகளாகும்.
58 தொகுதிகளில் வெற்றி
கடந்த 2004-இல் நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் 2 தொகுதிகளில்தான் வெற்றி பெறுவோம் என்று அந்த கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் 58 இடங்களில் வெற்றி பெற்று இரு கூட்டணி அரசுகளை உருவாக்கினோம். இந்த முறை நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். ஆட்சியை பிடிப்போமே தவிர, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க மாட்டோம் என்று குமாரசாமி தெரிவித்தார்.
உண்மையை எதிர்பார்க்க முடியாது
சாமுண்டீஸ்வர் மற்றும் பாதாமி தொகுதிகளில் தேவ கௌடாவும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்த கருத்து கணிப்புகள் குறித்து தேவகௌடா கூறுகையில் இவை போலியானவை. எங்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக நடத்தப்பட்டவையாகும். இவை பணக்கார கட்சிகளாலும் அவர்களின் ஆதரவாளர்களாலும் நடத்தப்படுபவை. இவர்களிடம் இருந்து எப்படி நேர்மையையும் உண்மையையும் எதிர்பார்க்க முடியும் என்றார்.
பக்கா வியூகம்
வொக்கலிகர்கள் மற்றும் வீர சைவர்களின் வாக்குகளை சித்தராமையாவுக்கு எதிராக திருப்ப குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. சித்தராமையாவை தோற்கடிப்பது என்பதை கௌரவ பிரச்சினையாகவே குமாரசாமி பார்க்கிறார். எனவே சித்தராமையாவுக்கு கடும் போட்டியை கொடுக்க குமாரசாமி கட்சி வியூகம் வகுத்துள்ளது.