காவிரியை பாதுகாப்போம்... சமூக வலைத்தளங்களில் வைரல் வாசகம் # karnatakabandh
பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலத்தில் மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்றது. காவிரியை பாதுகாப்போம்... கர்நாடகா விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழகத்துக்கு, கர்நாடகா அரசு காவிரி நீர் வழங்க ஒப்புக்கொண்டது. இதற்கு கர்நாடகா விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாட்களாக சாலை மறியல் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தன.
காலை 6 மணி முதலே பல இடங்கள் வெறிச்சோடியது. இது போதாது என்று, அவர்கள் காவிரியை காப்பாற்ற பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமும் பந்திற்கு ஆதரவு திரட்டினர்.
இதற்காக கர்நாடகாவில் பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற கொடியின் மீது "காவிரியைக் காப்போம், விவசாயிகளை காப்போம், கர்நாடகாவை காப்போம்" என்ற வாசகம் எழுதி சமூக வலைதளங்களில் உலவவிட்டனர்.
இதனால் கர்நாடகா பந்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பலரும் தங்களது டி.பி., எனப்படும் டிஸ்பிளே படங்களாக இதை வைத்துக்கொண்டனர். காவிரி தண்ணீர் தரமாட்டோம் என்று கூறி கர்நாடகாவில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பந்த் போராட்டத்தால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.