காவிரி வாரியம்: தமிழக அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது.. சிக்கல் தரும் சித்தராமையா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக்கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் கொடுக்கும் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணியக் கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் சொன்னது போல ஒரு ஸ்கீம் தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : காவிர மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் கொடுக்கும் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்து விடக் கூடாது.
காவிரி நீர் பங்கீட்டிற்காக ஒரு ஸ்கீமை ஏற்படுத்த வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றம் கூறியது. ஸ்கீம் என்றால் ஒரு திட்டம் அது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை. எனவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்றும் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மாநிலத்தின் உரிமை பறிபோகும் எனவே காவிரி நீர் பங்கீட்டை கண்காணிக்க ஒரு குழுவை மட்டுமே அமைக்க வேண்டும் என்று சித்த்ராமையா ஏற்கனவே கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சொல்லும் எதையும் கேட்காமல் தண்ணீர் இல்லை என்று தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மறுத்து வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளது கர்நாடகா. ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் உள்பட காவிரி நீர் பங்கீட்டை சரிவர செய்து கொள்ள ஏற்படுத்த வேண்டிய அமைப்புகள் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே தெளிவாக சொன்ன பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று சித்தராமையா பேசியுள்ளார்.