சித்தராமையா, எடியூரப்பா வாரிசுகள் மோதும் கர்நாடக தேர்தல்.. புதிய வியூகம் வகுக்கும் பாஜக, காங்கிரஸ்
கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் மகனும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிட இருக்கிறார்கள்.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் மகனும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிட இருக்கிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வியூகங்கள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது அங்கு பிரச்சாரத்திற்காகவும், வேட்பாளர்கள் தேர்வுக்காகவும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகனும், பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும் ஒரே தொகுதியில் போட்டியிட இருக்கிறார்கள்.
2008ல் உருவாக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியான வருணா தொகுதியில்தான் சித்தராமையா போட்டியிட்டு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதே தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிட இருக்கிறார். சித்தராமையா இந்தமுறை தன்னுடைய பழைய தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் இதே தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், பாஜக இந்த முடிவில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடுவது உறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மருத்துவம் படித்துவிட்டு அரசியல் ஆர்வம் இல்லாமல் இருந்த இவர், தன்னுடைய சகோதரரின் மரணத்திற்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கட்சிக்குள் வந்தார். இவர் பிறந்ததில் இருந்து வருணா தொகுதியில்தான் வசித்து வருகிறார்.
ஆனால் இந்த தொகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பெங்களூர்வாசியான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பாஜக கட்சியால் நிற்க வைக்கப்படுகிறார். சித்தராமையா குடும்பத்தை எதிர்க்க கூடிய பலம் பொருந்திய நபர் இவர் மட்டுமே என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.