கல்யாணத்துக்கு ஆயிரம் பேருக்குமேல் வந்தால் வரி போடப்படும்: கர்நாடக அரசு தடாலடி
பெங்களூர்: ஆயிரம் விருந்தினர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் திருமணங்களுக்கு அல்லது ரூ.5 லட்சத்துக்குமேல் செலவிடப்படும் திருமணங்களுக்கு வரி விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா எளிமை விரும்பி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்தாலும், சித்தராமையாவின் மகன்களுக்கு திருமணம் நடைபெற்றதே பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளார்.
பணக்காரர்களை பார்த்து நடுத்தரவர்க்கத்தினரும், ஆடம்பரமாக திருமணங்களை நடத்துவது அவர்களின் நிதி சுமையை அதிகரித்துவிடும் என்பது சித்தராமையாவின் கொள்கையாக உள்ளது. இந்நிலையில் சித்தராமையா தலைமையிலான அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆயிரம் பேருக்கு மேல் விருந்தினர்கள் கலந்துகொள்ளும் திருமணத்திற்கு வரி விதிக்கப்படும். அல்லது திருமணச்செலவு ரூ.5 லட்சத்தை தாண்டியிருந்தால் வரி விதிக்கப்படும். வரி விதிப்பு சதவீதம் குறித்து இன்னும் அரசு இறுதி முடிவெடுக்கவில்லை. விரைவில் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்.
1976ம் ஆண்டின், கர்நாடக திருமண ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கும் அம்சம் அதில் சேர்க்கப்படும். இதில் கிடைக்கும் வரி வருவாயை ஏழை, எளியவர்களின் திருமணத்திற்கு நிதி உதவியாக அரசு வழங்கும். இந்த திட்டத்துக்கு 'விவாக மாங்கல்யா' என்று பெயரிடப்படும்.
ஏற்கனவே கேரளாவில் இதுபோன்ற ஒரு சட்டம் உள்ளது. கேரளாவில் 500 பேருக்கு மேல் விருந்தினர்கள் வந்தாலே அந்த திருமண வீட்டாருக்கு வரி விதிக்கப்படுகிறது. கர்நாடகாவில் 1000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் திருமணங்களுக்குதான் வரி விதிக்க உள்ளோம்" என்றார். கர்நாடகாவில் கல்யாணம் நடத்துவோர் பத்திரிகை அடிக்கும்போது யோசித்துக்கொள்ளவும்.












Click it and Unblock the Notifications