காங்கிரஸ் ஆட்சிதான் என்றாலும், பாரத் பந்த்தால் பெங்களூரில் பெரிய பாதிப்பில்லை
பெங்களூர்: பாரத் பந்த்தை முன்னிட்டு கர்நாடகாவில் இன்று வேலை நிறுத்த போராட்ட தீவிரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள், வங்கிகளை தவிர்த்து பெரிய அளவில் பந்த் பாதிப்பு இல்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலம் கர்நாடகா என்பதால் அரசே பந்த்துக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் என்ற பேச்சு மக்களிடம் இருந்தது. அதற்கேற்ப, கர்நாடக அரசு பஸ் கழகமான கேஎஸ்ஆர்டிசி, பெங்களூர் நகர பஸ் கழகமான, பிஎம்டிசி டிரைவர் யூனியன்களும் பந்த்துக்கு, ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆட்டோ, டாக்சி யூனியன்களும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று காலை முதல் பெரும்பாலான ஆட்டோ, டாக்சிகள் இயங்கின.
ஓலா, ஊபேர் போன்ற நிறுவன கார்களும் இயங்கியதை பெங்களூர் சாலைகளில் பார்க்க முடிந்தது. கடைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்களும் திறந்திருந்தன. சில ஐடி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்திருந்தன. அதேநேரம் அரசு பஸ்கள் ஒரு சில மட்டுமே இயங்கின.
மகதாயி நதிநீர் பிரச்சினைக்காக, சமீபத்தில்தான் கர்நாடகாவில் பந்த் நடைபெற்றிருந்தது. எனவே மீண்டும் ஒருபந்த்தை மக்கள் வரவேற்கவில்லை என்பது கர்நாடக நிலவரமாக உள்ளது.