கர்நாடகாவில் இருந்து எம்.பி.யாகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: தமிழகத்தில் பிறந்து, ஆந்திராவில் வாழும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கர்நாடக ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
மோடி அமைச்சரவையில், வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினர் கிடையாது. அமைச்சராக உள்ளவர், அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினராக வேண்டும் என்பது விதிமுறை. எனவே நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் கர்நாடகாவில் இருந்து தேர்வான நான்கு ராஜ்யசபா எம்.பிக்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. ஒரு ராஜ்யசபா எம்.பிக்கு 44 எம்.எல்.ஏக்கள் வாக்குகள் அவசியம். கர்நாடக சட்டசபையில் பாஜகவின் பலம் 43ஆக உள்ளது. சுயேச்சைகள் ஆதரவுடன் நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுத்த அனுப்ப பாஜகவால் முடியும்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், "எனது தந்தையும், தாயும், பெங்களூர் ஜெயநகர் பகுதியில்தான் வசிக்கிறார்கள். எனவே கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இருப்பினும் அதுபோன்ற திட்டம் பாஜகவிடம் இருப்பது பற்றி எனக்கு தெரியாது" என்றார். பா.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப திட்டமிட்டது. ஆனால் அவர் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டி, கர்நாடக காங்கிரசார் சிதம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். அதேநேரம் நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப தயாராக உள்ளதாக கர்நாடக மாநில பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications