சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகா! கர்நாடக அமைச்சரின் குசும்பு பேச்சு !!
பெங்களூர் : வேலையே செய்யாமல் சுற்றித் திரியும் சோம்பேறிகளுக்கும், பணக்காரர்களுக்கும் தான் யோகா பயிற்சி தேவை என்று கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா தெரிவித்துள்ளார்.
வருகிற 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது....
யோகா பயிற்சி எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளுக்கும், பணக்கார குடும்பத்தினருக்கும் தான் சரியாக இருக்கும்.
ஏனென்றால் திறந்த வெளியில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை.
ஆனால் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உடல் வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சி தான். அதனால் அவர்கள் இந்த யோகா பயிற்சியை செய்ய அவசியம் இல்லை.
பிரதமர் நரேந்திரமோடி யோகா பயிற்சியில் கவனம் செலுத்துவதை காட்டிலும் நாட்டை வழிநடத்துவதில் நேரத்தை செலவழிக்கலாம். ஏனென்றால் பிரதமர் பதவிக்கு நேரம் பொன் போன்றது. இது அவருடைய கடமை ஆகும்.
யோகா பயிற்சி அளிக்க யோகா குருக்கள், நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சனேயா கூறினார்.