ஏரியில் குதித்து மூழ்கிய காரில் இருந்த 6 பேரை காப்பாற்றிய கர்நாடக அமைச்சர், ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

Karnataka minister, staff jump into lake, save 6 from sinking car
பெங்களூர்: கர்நாடகாவில் அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தனது டிரைவர்கள், பாதுகாவலருடன் ஏரி ஒன்றில் குதித்து அதில் மூழ்கிக் கொண்டிருந்த காரில் இருந்த 6 பேரை காப்பாற்றியுள்ளார்.

கர்நாடக மாநில ஆரம்ப கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் கிம்மனே ரத்னாகர்(61). அவர் நேற்று காலை அரசின் இன்னோவா காரில் தனது சொந்த ஊரான ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்தார். காலை 7 மணி அளவில் தீர்த்தஹள்ளியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பெகுவள்ளி அருகே செல்கையில் அவரின் காரை ஒரு வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் முந்திச் சென்றது.

15 நிமிடங்கள் கழித்து அமைச்சரின் கார் பெகுவள்ளி ஏரியை அடைந்தபோது மாருதி ஸ்விப்ட் கார் மூழ்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அமைச்சர் மற்றும் அவரது பாதுகாவலர் ஹல்ஸ்வாமி, டிரைவர் சந்திரசேகர், பாதுகாப்பு வாகன டிரைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏரியில் குதித்தனர்.

சந்திரசேகர் காரின் கதவை திறந்து 3 குழந்தைகளை வெளியே எடுத்து தன்னுடன் வந்த நபர்களுடன் அவர்களை கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அமைச்சர் உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் மூழ்கிக் கொண்டிருந்த காருக்கு திரும்பி 55 வயது பெண் உள்பட 3 பேரை மீட்டனர். அதற்குள் டிரைவர் சீட்டில் இருந்தவர் சுயநினைவை இழந்துவிட்டார்.

அவர்கள் அனைவரும் கரைக்கு கொண்டு வரப்பட்டதும் அமைச்சர் போன் செய்து மருத்துவரை வரவழைத்தார். மருத்துவர் காப்பாற்றப்பட்ட உதய் குமார்(40), அவரது மனைவி சுமா(35), 14 மற்றும் 8 வயது மகன்கள், உதயின் தாய் கீதா(55), உறவினரின் 3 வயது குழந்தை ஆகியோருக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகு அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, உதய்க்கு தனது உடைகளை அளித்துவிட்டு அமைச்சர் பெங்களூருக்கு கிளம்பினார்.

ஷிமோகா மாவட்டம் பத்ராவதியைச் சேர்ந்த உதய் குமார் எல்ட்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். அவர் தனது மனைவியின் சொந்த ஊரான உடுப்பி மாவட்டம் கர்கலாவுக்கு சென்றுவிட்டு பத்ராவதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தான் விபத்து நடந்து அமைச்சர் அவர்களை காப்பாற்றினார்.

இது குறித்து உதய் கூறுகையில்,

இது எங்கள் குடும்பத்திற்கு மறுபிறவி. அமைச்சர் கிம்மனே ரத்னாகருக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை. அவரால் தான் நாங்கள் இன்று உயிருடன் உள்ளோம். இல்லை என்றால் நீரில் மூழ்கி இறந்திருப்போம். நாங்கள் கர்கலாவில் இருந்து காலை 4 மணிக்கு கிளம்பினோம். திடீர் என்று ஸ்டீயரிங் பிரச்சனை ஏற்பட்டு கார் ஏரியில் விழுந்தது. ஜன்னல் வழியாக நீர் காருக்குள் புகுந்தது. நான் காரின் கதவை திறந்து பிறரை காப்பாற்ற முயன்றேன். ஆனால் நான் அதற்குள் பயந்துபோய் சுயநினைவை இழந்துவிட்டேன் என்றார்.

அமைச்சர் ரத்னாகர் கூறுகையில்,

காருக்குள் குழந்தைகள் இருந்ததை உணர்ந்தேன். என்னுடைய 2 டிரைவர்கள் மற்றும் பாதுகவலருடன் ஏரியில் குதித்து அவர்களை காப்பாற்றினோம். என்னுடன் குதித்த 3 பேரும் வேகமாக நீந்தி 6 பேரின் வாழ்வில் வித்தியாசத்தை ஏற்படுத்தியதற்காக அவர்களை நான் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+