தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர முடியாது.... சொல்வது கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பட்டீல்
பெங்களூர்: தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி செப்டம்பர் மாதம் வரை திறந்துவிட வேண்டிய 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவமழை சரியாக பெய்யாத காலங்களில் இடர்ப்பாட்டு கால கணக்கீட்டின்படி தமிழ்நாட்டுக்கு இதுவரை 101 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிட்டுள்ளோம். இன்னும் காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு கேட்பதில் அர்த்தம் இல்லை.
கர்நாடக விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. பெங்களூரு நகரம் மற்றும் காவிரி ஆற்று படுகைகளில் கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்துவிட முடியாது.
தமிழகத்துக்கு 45.37 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருப்பது சரியல்ல. இந்த மனுவுக்கு நாங்கள் தகுந்த பதிலை தெரிவிப்போம்.
இவ்வாறு அமைச்சர் எம்.பி.பட்டீல் கூறினார்.