காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா கடும் எதிர்ப்பு: ஜூன் 9ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள கர்நாடக அரசு, இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 9ம்தேதி அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.
கடந்த மூன்றாம் தேதி டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானது. இதை பரிசீலித்த பிரதமர், அடுத்த அமைச்சரவை கூட்டத்திலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சரவையில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பப்படும் வரைவில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி கசிந்தது.
இந்த தகவல் கர்நாடக அரசுக்கும் கிடைத்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க ஜூன் 9ம்தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்தகுமார், சித்தேஸ்வர் ஆகியோரும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்படும்.
ஜூன் 10ம்தேதி கர்நாடக அனைத்து கட்சி குழுவுடன் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்குவோம்" என்றார். இதனிடையே மத்திய அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், தண்ணீர் பங்கீடு குறித்த முடிவை அந்த வாரியமே எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.