கர்நாடகா தேர்தல் முடிவுகள்-எகிறும் எதிர்பார்ப்பு, அசத்தப்போவது யாரு? குமாரசாமி கிங்கா- கிங் மேக்கரா?
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறதூ. ஜேஎடிஎஸ் குமாரசாமி கிங்கா, கிங் மேக்கரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு 12-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.4 வாக்குகள் பதிவாகியுள்ளன. கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒருமாதிரி இருக்க, ரிசல்ட் இன்று வெளியாகிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் எண்ணற்ற வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்ட சர்ச்சையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, அதே போல் ஜெயாநகர் தொகுதியில் பி.என்.விஜயகுமார் என்ற பாஜக வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
சித்தராமய்யாவுக்கு கல்தாவா?
பதாமி, சாமுண்டீஸ்வரி தொகுதிகளில் போட்டியிடுகிறார் சித்தராமய்யா. காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையாதான் முதலமைச்சர். ஆனால் மெஜாரிட்டிக்கு சில இடஙகள் குறைந்தால், சுயேட்சைகள், கட்சியிலிருந்து வெளியேறியவர்களின் ஆதரவை பெறக்கூடும். தலித்தை முதல்வராக்க வேண்டும் என்ற குரல் வலுத்தால் சித்தராமய்யா கழற்றிவிடப்படுவார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரப்பா துணை முதல்வராக்கப்படலாம்..
ஆபரேஷன் லோட்டஸ் செயல்படுத்தப்படுமா?
பாஜக பெரும்பான்மை பெற்றால் டியூரப்பா முதல்வர், பெல்லாரி எம்.பி. ஸ்ரீராமுலு துணை முதல்வர். பெரும்பான்மைக்கு தேவைப்பட்டால் சுயேட்சைகள் ஆதரவு பெறக்கூடும். அதேநேரம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கும் ஆபரேஷன் லோட்டஸ் முன்னெடுக்கப்படலாம்.
குமாரசாமிக்கு ஆதரவு தர ரெடி
பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முயற்சிக்கலாம். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தின்படி குமாரசாமிக்கு பா.ஜ.க. ஆதரவு தரலாம். அதேநேரம் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.
அதிகாரப் பகிர்வு அல்லது வெளியிலிருந்து ஆதரவு.
காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியானால் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் அதிகாரப்பகிர்வு செய்யக்கூடும். குமாரசாமி கட்சி எவ்வளவு சீட் பெறுகிறது என்பதை பொறுத்து பேச்சுவார்த்தை முடிவு இருக்கும். அதிகாரப்பகிர்வு சுமுகமாக நடந்தால் சித்தராமய்யாவுக்கு கல்தாதான். ஏனென்றால் சித்தராமய்யாவுக்கும், குமாரசாமிக்கும் ஏழாம் பொருத்தம். குமாரசாமியும், காங்கிரசும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யலாம்.
மீண்டும் இரண்டரை வருட ஆட்சி ஃபார்முலா?
பாஜக அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியானால் குமாரசாமியுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள உடன்படிக்கை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு கட்சியும் தலா இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்யலாம். ஏற்கனவே பெற்ற பாடத்தின் அடிப்படையில், முதல் இரண்டரை வருடம் பா.ஜ.க. ஆட்சி செய்ய குமாரசாமியிடம் வலியுறுத்தும்.