கர்நாடகாவில் அதிசயம்: சன்டேயில் வேலை பார்த்து 10,000 பைல்களை கிளியர் செய்த அரசு ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடக தலைமைச் செயலக அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து நிலுவையில் இருந்த 10 ஆயிரம் கோப்புகளை சரிபார்த்து முடித்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக வேலை நடந்ததை பார்க்க முடிந்தது. அலுவலக ஊழியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மாலை வரை பணியாற்றி நிலுவையில் கிடந்த 10 ஆயிரம் கோப்புகளை சரிபார்த்து முடித்துள்ளனர். முன்னதாக அரசு அலுவலகங்களில் கோப்புகள் நிலுவையில் கிடப்பது குறித்து மாநில அமைச்சரவை கடந்த 28ம் தேதி அதிருப்தி தெரிவித்திருந்தது.
கடந்த 28ம் தேதி வரை அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 541 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை 40 ஆயிரம் கோப்புகள் சரி பார்க்கப்பட்டதையடுத்து தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் கோப்புகள் நிலுவையில் உள்ளன.
இருப்பதிலேயே வருவாய்த் துறையில் தான் கோப்புகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளன. அதை அடுத்து உள்துறை, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில் அதிக அளவில் கோப்புகள் நிலுவையில் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்று நாளில் விடுப்போ, சிறப்பு ஊதியமோ வழங்கப்படாதாம்.
இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில்,
இதுவரை விடுமுறை நாட்களில் எங்களை வேலைக்கு அழைத்தது இல்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டார். ஒரு நாள் மட்டும் என்பதால் பிரச்சனை இல்லை. கடந்த சனிக்கிழமை வரை 30 ஆயிரம் கோப்புகளை சரிபார்த்து முடித்தோம். ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆனது என்றார்.