காவிரி பிரச்சினை: வன்முறைகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாம்- உச்சநீதிமன்றம் அதிருப்தி
டெல்லி: காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், தமிழக அரசு வன்முறைகளை தடுக்க தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, தண்ணீர் தேவை ஆகியவை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்க 4ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 5ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த முடிவு 18ம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது என்றும், இடைக்கால ஏற்பாடாக தமிழகத்துக்கு 7ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழகத்துக்கு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. காவிரி விவகாரத்தில் 2 மாநிலங்களும் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜா தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை மீது ஆட்சேபனை இருந்தால் அக்டோபர் 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் வன்முறைகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும்.
வன்முறைக் களமான கர்நாடகா

தமிழகம் வன்முறையைத் தடுக்கத் தவறி விட்டதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. உண்மையில் தமிழகத்தை விட கர்நாடகத்தில்தான் வன்முறை வெறியாட்டம் பல மடங்கு அதிகமாக இருந்தது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது பெங்களூருவில் மைசூரு சாலையில் டி சவுசா நகரில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தமான பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. கர்நாடகா முழுவதும் வரலாறு காணாத வன்முறை வெடித்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications