ஷெல் நிறுவன பெயரில் வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரத்துக்கு 25 சொத்துக்கள்.. சிபிஐ
டெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாட்டில் ஷெல் நிறுவன பெயர்களில் 25 சொத்துக்கள் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இத்தகவலை அது உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேற்று கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், விசாரணை விவரங்களை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான கபில் சிபல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரத்தின் தாயார், தந்தை, மனைவியின் பெயரை சீர்குலைக்கும் வகையில் சிபிஐ செயல்பட்டு வருவதாகவும், அனைத்துமே அவதூறான புகார்கள் என்றும் அவர் வாதிட்டார்.
மேலும் அவர் வாதிடுகையில், கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தபோது, அவரது சொத்துக்கள் குறித்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அரசோ, வருமான வரித்துறையோ அல்லது சிபிஐயோ, கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடுகளில் சொத்து இருப்பதாக நிரூபித்தால் அதை உடனடியாக கையகப்படுத்திக் கொள்ள கையெழுத்துப் போட்டுத் தர கார்த்தி சிதம்பரம் தயார் என்று வாதிட்டார்.
2007ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ. 305 கோடி முதலீடு செய்தது தொடர்பான அனுமதி முறைகேடாக கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications