சிறுமி பாலியல் வன்கொடுமை.. மரண தண்டனை வழங்க காஷ்மீர் கிறிஸ்தவர்கள் கோரிக்கை!
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என காஷ்மீர் கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
காஷ்மீர்: சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என காஷ்மீர் கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது இஸ்லாமிய சிறுமி கடந்த ஜனவரி மாதம் திடீரென மாயமானார். மாலை நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடினர்.
ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் போலீசாரோ புகாரை உதாசீனப்படுத்தியதோடு சிறுமி ஓடிப்போயிருப்பாள் என தரக்குறைவாக பேசினர்.
பலாத்காரம் கொலை
இதைத்தொடர்ந்து மாயமான நான்கு நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல் பலத்த காயங்களுடன் அங்குள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் உடல் முழுவதும் நகக்கீறல்களுடன் தலை நசுக்கப்பட்டிருந்தது சிறுமியின் உடல்.
8 பேரின் கொடூர செயல்
இதுதொடர்பான விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த 8 பேர் சிறுமியை கடத்தி அப்பகுதியில் இருந்த கோவிலில் வைத்து 4 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
நாடு முழுவதும் போராட்டங்கள்
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மரண தண்டனை வேண்டும்
இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என காஷ்மீர் கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கிறிஸ்டியன் கம்யூனிட்டி பிரயர் சென்டர் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.
விரைவில் நீதி
மேலும் ஜம்முவில் உள்ள வகுப்புவாத மற்றும் அரசியல்மயமாக்கப்படும் சில அமைப்புகளின் முயற்சிகள், அந்த அப்பாவி சிறுமிக்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுத்துவிட்டது. இந்த அறிக்கையின் மூலம் மாநிலத்தின் கிறிஸ்துவ சமூகம், கொல்லப்பட்ட சிறுமிக்கான நீதியை விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.