தெலுங்கானாவின் முதலாவது முதல்வரானார் சந்திரசேகர்!! 11 அமைச்சர்களும் பதவியேற்பு!!
ஹைதராபாத்: நாட்டின் 29வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா இன்று நாட்டின் 29வது மாநிலமான உதயமானது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய தெலுங்கானா முழுவதும் கோலாகல கொண்டாட்டம்தான்.
இன்று காலை தெலுங்கானாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஆந்திரா ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக் கொண்டார். அதேபோல் ஹைதராபாத் கன்பார்க்கில் தெலுங்கானா போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு சந்திரசேகர் ராவ் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் சந்திர சேகர் ராவ். அங்கு தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக சந்திரசேகர் ராவுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவியேற்பு செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து சந்திரசேகர் ராவ் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மொத்தம் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் சந்திரசேகர் ராவின் மகன் ராமாராவ், மருமகன் ஹரீஷ் ராவ் ஆகியோரும் அடங்குவர்.