என்னை தொட்டுப் பாருங்கள்… தெலங்கானா ஆட்சி கவிழும்… சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
ஹைதராபாத்: என்னை கைது செய்தால் தெலங்கானாவில் ஆட்சி கலைக்கப்படும் என்று சந்திரசேகராவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு.
தெலங்கானாவில் எம்.எல்.சி தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போடுவதற்காக தெலங்கானா அரசின் நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக அக்கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த்ரெட்டி கைது செய்யப்பட்டார்.
ஸ்டீபன்சன் எம்.எல்.ஏ.வுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய டெலிபோன் பேச்சும் ஊடகங்களில் வெளியானதால் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டு கேட்பு தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திராவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இரு மாநில முதல்வர் இடையே மோதல் மூண்டுள்ளது.
தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக புகார் செய்வதற்காக சந்திரபாபு நாயுடு, டெல்லி சென்றுள்ளார். அங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நான் டெலிபோனில் பேசியதாக வெளிவந்துள்ள டேப் போலியானது என்றார். சந்திர சேகர் ராவ் என்னையும், எனது கட்சி எம்.எல்.ஏ.க்களை அச்சுறுத்துவதற்காக போலீசை பயன்படுத்தி வருகிறார். ஜோடிக்கப்பட்ட இந்த டேப் விவகாரத்திற்காக நான் ஏன் பதில் அளிக்க வேண்டும் என்றும் கேட்டார்.
நாங்கள் இப்போது 2 மாநிலமாக பிரிந்து விட்டோம். ஆனால் இரு மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும் தெலுங்கு மக்கள் ஆவார்கள். மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்த பிரச்சினைக்கு எல்லாம் சந்திரசேகர் ராவ் தான் காரணம் தனது அமைச்சர் மூலம் அவர் தான் தெலுங்கு தேசத்தை உடைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
என்னை கைது செய்ய சந்திர சேகர் ராவ் முயற்சித்தால் அந்த நாள் அவரது அரசின் கடைசி தினமாக இருக்கும் உடனடியாக அவரது தெலுங்கானா அரசு கவிழ்ந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களின் நேரடி மோதல் காரணமாக ஊடகங்களுக்குத்தான் செம தீனி கிடைத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.