நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போர்: கேஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லி: ஊழலுக்கு எதிரான போரை நாடுமுழுவதும் நடத்த உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
டெல்லி மக்கள் எங்களுக்கு ஆட்சி நடத்தும் வாய்ப்பை அளித்துள்ளனர்.
ஜனலோக்பால் மற்றும் சுவராஜ் மசோதாவை நிறைவேற்றுவோம். ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற டெல்லி ராம்லீலா மைதானத்தில் திறந்தவெளி சட்டசபை கூட்டத்தொடரை நடத்த தயாராக உள்ளேன்.
ஊழலுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம். இந்த போரை நாடு முழுவதும் எடுத்துச்செல்வேன்.
எனது அமைச்சரவை சகாக்கள் அரசு கார்களில் செல்வது பற்றி எல்லோரும் குறை கூறுகிறார்கள். அரசு கார்களை பயன்படுத்த மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. சிவப்பு சுழல் விளக்கு கார்களை பயன்படுத்த மாட்டோம் என்றுதான் கூறியுள்ளோம்.
எனக்கு டெல்லி பகவான்தாஸ் சாலையில் 5 படுக்கையறைகள் கொண்ட இரண்டு வீடுகளை பார்த்துள்ளனர். அவற்றில் ஒரு வீட்டில் நான் குடும்பத்துடன் குடியேறுவேன். மற்றொரு வீட்டை அலுவலகமாக பயன்படுத்துவேன்.
அதிகாலையிலும், இரவு வேளையிலும் நான் பணியாற்ற அது வசதியாக இருக்கும். நான் முன்பு 4 படுக்கையறை குடியிருப்பில் வசித்து வந்தேன். தற்போது, 5 படுக்கையறை வீட்டுக்கு போகிறேன். அவ்வளவுதான் வித்தியாசம் என்றார் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.