அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து ‘டெஸ்ட்’ வைத்த கெஜ்ரிவாலின் மகள்... அதிகாரி பாஸ்!
டெல்லி: டெல்லி முதலமைச்சரின் மகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்து, ஆனால் அதனைப் பெற அவர்கள் மறுத்து விட்ட சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் மத்தியில் பேசினார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அப்போது அவர், ‘ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்த பின்னர் லஞ்சம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என நான் கூற விரும்பவில்லை. எனினும், அரசு துறைகளில் 70 முதல் 80 சதவீதம் வரை லஞ்சம் குறைந்துள்ளது' என்றார்.
இதற்கு உதாரணமாக தனது மகள் குறித்த சம்பவத்தை அவர் தெரிவித்தார். அதாவது, சமீபத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதா ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
தன்னை முதல்வரின் மகள் எனக் காட்டிக் கொள்ளாமல், மற்றவர்களைப் போலவே வரிசையில் காத்திருந்தார் ஹர்சிதா. பின்னர், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஒரு ஆவணத்தைக் கொண்டு வரவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்த ஹர்சிதா, 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், எனக்கு உடனே லைசென்ஸ் வேண்டும்' என அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், முறையான ஆவணம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த ஆவணத்தை எடுத்து அவர் அதிகாரிகளிடம் அளித்துள்ளார். அதில், தந்தையின் பெயர் என்ற இடத்தில் கெஜ்ரிவாலின் பெயர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், முதல்வரின் மகளுக்கு பம்பரமாகச் சுழன்று லைசென்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், ‘டெல்லி முதல்வர் என்ற வகையில் நான் நினைத்திருந்தால் அதிகாரிகளை வீட்டுக்கே வரவழைத்து லைசென்சுக்கு ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால், அரசு அலுவலகங்கள் இப்போது எப்படி செயல்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வதற்காக எனது மகள் தனியாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பித்தார்.
எனது மகளின் கையில் ரகசிய கேமரா ஒளித்து வைத்திருக்கலாம் என்ற அச்சத்திலேயே அந்த அதிகாரி லஞ்சம் வாங்க மறுத்து விட்டார். இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகள் தங்களது கடமைகளை தைரியமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஊழலின் அளவு 70 முதல் 80 சதவீதம் குறைந்துள்ளது' எனக் கூறியுள்ளார்.