மாட்டிறைச்சி தடையை எதிர்கொள்ள, சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்துகிறது கேரளா
திருவனந்தபுரம்: மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடை குறித்து விவாதம் நடத்த வரும் 8ம் தேதி கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மே 23ம் தேதி பிறப்பித்தது.
இது நாடெங்கும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதிலும் கேரள மாநிலத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சம் தொட்டுள்ளன. இந்நிலையில் ஜூன் 8ல் சட்டசபையை கூட்டி இதுபற்றி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவதா, மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு சட்டம் இயற்றுவதா, பிற மாநில முதல்வர்களை அழைத்து மாட்டிறைச்சித் தடையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதா என்பது குறித்தெல்லாம் சிறப்பு சட்டசபை கூட்டத்தின்போது எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்படும் எனத் தெரிகிறது.