12 வயது சிறுமியை 35 வயது நபருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த கிராமப் பஞ்சாயத்து
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காப் பஞ்சாயத்து 35 வயது நபருக்கு 12 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளது. மேலும் அவரை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்காவிட்டால் ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என சிறுமியின் தந்தைக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள குங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கெனராம் பிரஜபத். உள்ளூர் காப் பஞ்சாயத்து கூடி சோனாதி கிராமத்தைச் சேர்ந்த லீலாராம்(35) என்பவருக்கு கெனராமின் 12 வயது மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தாயின் வீட்டிற்கு வந்த சிறுமி லீலாராம் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி திரும்பிச் செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் காப் பஞ்சாயத்தாரோ சிறுமியை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்காவிட்டால் ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கெனராமிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கெனராம் காப் பஞ்சாயத்தாரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் காப் பஞ்சாயத்தார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் காப் பஞ்சாயத்தார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.