1975 எமர்ஜென்சியை எதிர்த்து சிறைவாசம் அனுபவித்தோரை கவுரவிக்கிறது ஹரியானா பா.ஜ.க. அரசு!!
சண்டிகர்: 1975ஆம் ஆண்டு அவசர நிலை சட்டம் அமலில் இருந்தபோது அதை எதிர்த்து சிறைவாசம் அனுபவித்தோருக்கு தாமிர பட்டயம் வழங்கி சிறப்பிக்க ஹரியானா ஆளும் பா.ஜ.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தாமிர பட்டயம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சிறப்பு அம்சமாக மொழிப்போர் தியாகிகள் சிறப்பிக்கப்படுகின்றனர்.
தற்போது ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க. அரசு, 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு சிறையில் துன்பத்தை அனுபவித்தோரை கவுரவிக்க முடிவு செய்துள்ளது. அவசரநிலை காலத்தில் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அம்மாநில அரசு சேகரித்துள்ளது.
வரும் ஜனவரி 26-ந் தேதியன்று குடியரசு தின நாளில் அவசரநிலையை எதிர்த்துப் போராடியோரை சிறப்பிக்கும் வகையில் தாமிர பட்டயம் வழங்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஹரியானா அரசின் இந்த நடவடிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.