4 பேரைக் கடித்துக் கொன்ற ஆண் புலி சுட்டுக் கொலை - கிராம மக்கள் நிம்மதி
மும்பை: மகாராஷ்ட்டிராவில், நான்கு கிராமவாசிகளைக் கொன்று பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வந்த புலியை வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.
மகாராஷ்ட்டிர மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ளது டோங்கர் ஹல்டி கிராமம். கடந்த 17ம் தேதி அதிகாலை அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களது மாடுகளைத் தேடி அருகிலிருந்த சிச்பள்ளி சரக காட்டுப்பகுதிக்குள் சென்றனர்.
அப்போது அடர்ந்த புதர் மறைவில் மறைந்திருந்த புலி ஒன்று, டட்டு பாண்டுரங் தோலே(35) என்பவரின் மீது ஆவேசமாக பாய்ந்து, அவரைக் கடித்துக் கொன்றது.
தகவல்...
பயத்தில் உறைந்த மற்ற கிராமவாசிகள் அருகிலிருந்த மரத்தில் ஏறி நின்றபடி, இது தொடர்பாக கிராமத் தலைவருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாக அந்தப் புலி காட்டுக்குள் தப்பிச் சென்று மறைந்தது.
போராட்டம்...
புலி தின்றது போக மிச்சமாக கிடந்த பாண்டுரங் தோலே உடலின் எஞ்சிய பாகங்களை சேகரித்த வனத்துறையினர், அவற்றை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின்னர், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், தொடர்ந்து அப்பகுதியில் அட்டூழியம் செய்துவரும் புலியை சுட்டுக் கொன்றால்தான், பிரேதத்தை வாங்குவோம் என்று கூறி கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புலியைக் கொல்ல வேண்டும்...
இதேபோல், இதுவரை சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த 4 பேரை கொன்றுள்ள அந்த புலியை கொல்ல வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இழப்பீடு...
பேச்சுவார்த்தை மூலம் கிராமவாசிகளை சமரசம் செய்த வனத்துறை அதிகாரிகள், புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பலியானவரின் குடும்பத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
வனத்துறைக் காவலர்கள்...
அதனைத் தொடர்ந்து மனித ரத்த ருசி கண்ட அந்த இளம் புலியை சுட்டுக் கொல்ல துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர்களான 3 வனத்துறை காவலர்கள் அப்பகுதியில் நியமிக்கப்பட்டனர்.
சுட்டுக் கொலை...
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் டோங்கர் ஹல்டி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறைக் காவலர்கள், அங்கு பதுங்கியிருந்த சுமார் இரண்டரை வயதுள்ள ஆண் புலியை சுட்டுக் கொன்றனர்.
நிம்மதி...
நான்கு கிராமவாசிகளை கடித்துக் கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.