கோஹினூர் வைரத்தை கிப்ட்டா கொடுத்துட்டோம்.. திரும்ப பெற முடியாது: மத்திய அரசு
டெல்லி: கோஹினூர் வைரம் இந்தியாவால் இங்கிலாந்து அரசுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. எனவே, அதனைத் திரும்ப பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கோஹினூர் வைரமானது 105 காரட் மதிப்பு கொண்டது. இது தான் தற்போதுவரை உலகின் மிகப்பெரிய வைரமாகக் கருதப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரமானது, பலரிடம் கைமாறி இறுதியில் கடந்த 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது. அப்போது முதல் பிரிட்டன் மன்னரின் பரம்பரை சொத்தாக மாறிய அந்த வைரம், தற்போது மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்த கிரீடமானது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் இளவரசர் வில்லியமை மணந்துள்ள இளவரசி கேத்மிடில்டன், அடுத்த மகாராணி யாக பட்டம் ஏற்கும்பட்சத்தில் இந்த கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் அவரைச் சென்றடையும்.
இந்நிலையில், அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி முன்னணி என்ற அமைப்பு, கோஹினுர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‘‘பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட கோஹினூர் வைரத்தை பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அந்த வைரம் இந்தியாவின் இறையாண்மையை பிரதிபலிக்கும் வைரம். அது இந்தியாவில் தான் இருக்க வேண்டும் பிறப்பிடத்துக்கே அந்த வைரத்தை மத்திய அரசு கொண்டு வர எண்ணம் வைத்துள் ளதா? என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘கோஹினூர் வைரத்தை திரும்ப பெற முடியாது. அந்த வைரம் திருடப்படவில்லை. அது கடந்த 1849ம் ஆண்டு இங்கிலாந்து அரசுக்கு இந்தியாவால் பரிசாக அளிக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் கோஹினூர் வைரம் குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன், ‘‘மகாராணியின் மகுடத்தில் அந்த வைரம் பதிக்கப்பட்டு விட்டது. அதை திரும்ப இந்தியாவுக்கு அளிப்பார்கள் என நான் நம்பவில்லை'' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.