கோசி நதியில் பெருவெள்ளம்: பீகாரின் 30 கிராமங்களில் இருந்து 65 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
பாட்னா: கோசி நதியில் பயங்கர வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பீகாரில் 30 கிராமங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கன மழை பெது வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோசி நதி கரையோரம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவினால் நதிநீர் அதன் பாதையில் போக வழி இல்லாமல், கோசி நதியில் நீர்நிலை மிகவும் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பெரும் அடைப்பை நேபாள ராணுவம் உடைத்து விட முடிவு செய்துள்ளது.
இதனால் கோசியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு பீகாருக்குள் நுழையும் அபாயம் உள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பீகாரின் 8 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
இதனை எதிர்கொள்ள, மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பீகாரின் 30 கிராமங்களைச் சேர்ந்த 63 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகாக சி17 ரக விமானத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. விமானத்தில் 20 மருத்துவர்கள் கொண்ட குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.