இந்திய கோழி இறைச்சி, முட்டை இறக்குமதிக்கு தடை விதித்த குவைத்
டெல்லி: சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து கோழி, கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை இறக்குமதி செய்ய குவைத் அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து கோழி, கோழி இறைச்சி, முட்டையை இறக்குமதி செய்ய குவைத் தடை விதித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி, முட்டையை இறக்குமதி செய்ய வளைகுடா நாடுகளின் பிஏஏஎப்ஆர் அமைப்பு விதித்த தடை கடந்த அக்டோபர் மாதம் தான் நீக்கப்பட்டது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து கோழி இறைச்சி, முட்டை, கோழி ஆகியவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய குவைத் அரசு தடை விதித்துள்ளது என்றார்.
இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த தடையால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம வரை ரூ.584 கோடி அளவுக்கு கோழி, கோழி இறைச்சி, முட்டை ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டது.