அத்வானி வெப்சைட்டில் ஊடுருவிய பாகிஸ்தானியர்
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பாகிஸ்தானை சேர்ந்த நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று வேலூர் வந்துள்ளார். இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ வெப்சைட் 'lkadvani.in' சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அந்த வெப்சைட்டில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முகப்பு வாசகத்துடன், காஷ்மீரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்பது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியுடன் பேச்சுவார்த்தை நடத்த இரு தூதுவர்களை நரேந்திரமோடி அனுப்பி வைத்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அத்வானியின் வெப்சைட்டை ஹேக் செய்த நபர் தனது பெயரை முகமது பிலால் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாசகனத்தின் துவக்கத்தில் காலை வணக்கம் நரேந்திரமோடி என்று ஆரம்பித்து அதன்பிறகு காஷ்மீர் தொடர்பான தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்கு வந்ததும் வெப்சைட்டை முடக்கி யாரும் பார்க்க முடியாமல் செய்தனர். இன்று மாலை வரை அந்த வெப்சைட் முடக்கியே வைக்கப்பட்டிருந்தது.