மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: ஜாமீனில் விடுதலைாகி வெளியே வந்தார் லாலு பிரசாத் யாதவ்
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதான ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அக்டோபர் மாதம் 3ம் தேதி அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கைதான லாலுவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் லாலு ஜாமீன் கோரி உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் பிர்சா முண்டா சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார்.
சிறை வாசலில் நின்று கொண்டிருந்த ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி நிர்வாகிகள் லாலுவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் விஐபி அறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு தோட்ட வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.