மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு அமோக வெற்றி- இந்தியா டிவி கருத்து கணிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனை கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 15ம்தேதி நடக்கிறது. இதில் மகாராஷ்டிராவின் அரசியல் நிலை குறித்து இந்தியாடிவி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன. அதன்படி அம்மாநிலத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி 3ல் இரண்டு பங்கு இடங்களை வசப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.
பிரமாண்ட கூட்டணி
மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி பெயர் மகாயூதி என்று அழைக்கப்படுகிறது. அதாவது பிரமாண்ட கூட்டணியாம். இதில் பாஜக, சிவசேனை, ஆர்பிஐ, ஸ்வாபிமானி கட்சி, மற்றும் ராஷ்டிரிய சமாஜ் கட்சி ஆகியவை உள்ளன. இந்த கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 206 இடங்களை கைப்பற்றுமாம்.
பாஜகவுக்கு 72 சதவீத வாக்குகள்
மொத்த இடங்களில் பாஜக கூட்டணி கைப்பற்றப்போகும் இடங்கள் 72 சதவீதம் என்பது இந்த கருத்து கணிப்பு சொல்லும் சேதி. 3ல் இரண்டு பங்கு வெற்றி என்றும் கூறலாம்.
காங்கிரஸ் கூட்டணிக்கு படுதோல்வி
அதே நேரம் ஆளும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 59 சீட்டுகள்தான் கிடைக்குமாம். பிறர் 23 இடங்களில் வெல்வார்கள் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
கடந்த தேர்தல் நிலை
2009ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களிலும், பாஜக கூட்டணி 90 இடங்களிலும், பிறர் 54 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.