முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இனிமேல் ஓட மாட்டேன்: அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி
டெல்லி: டெல்லியில் ஆட்சியை பிடித்தால் மீண்டும் ராஜினாமா செய்யமாட்டேன் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர், அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்து உள்ளார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 2013ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 28 இடங்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அந்த ஆட்சி நீடிக்கவில்லை. பதவி ஏற்ற 49 நாளிலேயே கெஜ்ரிவால் ராஜினாமா செய்து விட்டார்.
இந்நிலையில், டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
ஆனால் இந்த முறை ஆட்சிக்கு வந்தால், ராஜினாமா செய்வது இல்லை என்று கெஜ்ரிவால் தீர்மானித்து உள்ளார். இதுகுறித்து அவர் வலைத்தள பக்கத்தில் எழுதி இருப்பதாவது:
கடந்த முறை முதல்வர் பதவியை விட்டு நான் விலகியது குறித்து டெல்லி மக்களில் பெரும்பாலானோர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். நாங்கள் பொய் சொல்லவில்லை, எதையும் திருடவில்லை. ஆனால் தங்களுடைய நம்பிக்கையை இழக்கும் வகையில் நான் நடந்து கொண்டதாக மக்கள் கருதினார்கள். அதற்காக அவர்களிடம் நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு தடவை அப்படி நடந்து விட்டது என்பதால் இனிமேலும் அப்படி நடக்காது.
மேலும் பிரதமர் ஆகும் ஆசையில்தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக மக்களிடையே பரவலாக ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அது உண்மை அல்ல. நான் முதல்வர் பதவியை விட்டு விலகிய உடனேயே டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன்.
இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்த முறை முதல்வரானால், நான் முன்பு போல் ராஜினாமா செய்ய மாட்டேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். இவ்வாறு கெஜ்ரிவால் அதில் தெரிவித்துள்ளார்.