டைப்ரைட்டர் உடைக்கப்பட்டதால் பிரபலமானேன்... ஆனால் வருமானம் போய் விட்டது: உ.பி. முதியவர் வருத்தம்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் டைப்ரைட்டரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கிப் போட்டு உடைத்த சம்பவம் புகைப்படங்களாக இணையத்தில் வைரலாக பரவியது. இதனால், பாதிக்கப்பட்ட முதியவர் மீது அனைவருக்கும் இரக்கம் ஏற்பட்டது. ஆனால், இந்த சம்பவத்தால் தனது வருமானத்தை இழந்து விட்டதாக அம்முதியவர் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் அரசு அலுவலகம் ஒன்றின் வெளியே அமர்ந்து தட்டச்சு செய்து கொடுத்து வாழ்க்கையை நடத்தி வரும் முதியவர் கிருஷ்ணகுமார். கடந்தவாரம் இவரது டைப்ரைட்டரை காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கிப் போட்டு உடைத்தார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. அதனைத் தொடர்ந்து அந்த காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த முதியவருக்கு புதிய டைப்ரைட்டர் வழங்கிய மாவட்ட நிர்வாகம், ரூ.1 லட்சம் இழப்பீடு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
இந்நிலையில், சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமடைந்ததால் தனது வருமானத்தை இழந்து சாப்பிட வழியில்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார் கிருஷ்ண குமார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "அஞ்சலகம் முன்பு தட்டச்சு செய்து கொடுத்ததால் கொஞ்சம் வருவாய் கிடைத்து வந்தது. என் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் நான் தேவையற்ற வகையில் பிரபலமாகியுள்ளேன்.
என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் சேர்ந்து விடுவதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கடந்த இரு நாட்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதிக்கவில்லை என்றால், என் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவது. நான் வேலை செய்யவே வந்திருக்கிறேன்; ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க அல்ல.
உதவி செய்வதாகக் கூறி பலர் என்னிடம் வங்கிக் கணக்கு கேட்டனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. அடையாளம் தெரியாதவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர்" என வருத்தத்துடன் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.