இதுதானா குஜராத் மாடல்? பெண்கள் நிலை ரொம்பவே மோசம்! தேர்தலில் வெறும் பார்வையாளராக அமர வைத்த கட்சிகள்
காந்திநகர்: குஜராத் மாடலை இந்தியா முழுவதும் அமல்படுத்துவோம் என்று ஒருபக்கம் பேசிக்கொண்டிருக்கையில், தற்போது நடைபெற உள்ள அம்மாநில சட்டசபைத் தேர்தலில் பெண்களின் நிலை கட்சி பாகுபாடின்றி மிகவும் மோசமாக இருக்கிறது. விரிவாக பார்ப்போம்.
இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
காலாவதியான ஆன்லைன் ரம்மி தடை மசோதா : ஆளுநர் அலட்சியம்.. சந்தேகம் எழுப்பும் வேல்முருகன்!
1,621 வேட்பாளர்கள்
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபையில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், 93 தொகுதிகளுக்கு 2 வது கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தமாக இந்த தேர்தலில் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை சேர்ந்த 1,621 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
பெண் வேட்பாளர்கள்
இந்த 1,621 பேரில் 139 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக உள்ளார்கள். இந்த எண்ணிக்கை 10 விழுக்காட்டை கூட எட்டவில்லை. கட்சிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக பாஜகவில் 182 தொகுதிகளில் 18 பேர் போட்டியிடுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியில் 14 பெண்கள் போட்டிகின்றனர். 2 கட்சிகளிலும் பழங்குடியின மற்றும் பட்டியலின பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.
ஆம் ஆத்மியில் குறைவு
மூன்றாவது கட்சியாக இதில் போட்டியிடும் ஆம் ஆத்மி சார்பில் 182 தொகுதிகளில் 6 பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளார்கள். பகுஜன் சமாஜ் கட்சி 13 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. குஜராத்தில் 14 தொகுதிகளில் போட்டியிடும் அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 2 பெண் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.
பெண் சுயேட்சைகள்
இந்த கட்சிகள் அல்லாமல் 56 பெண் சுயேட்சைகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். குஜராத்தில் 50 சதவீத பெண் வாக்காளர்கள் இருக்கும் சூழலில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டு இருப்பது பெண்களுக்கு குஜராத் மாநிலத்தில் வழங்கப்படும் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த கேள்வியை எழுப்புகிறது.
2017 தேர்தல்
கடந்த 2017 தேர்தலை எடுத்துக்கொண்டால் இதைவிட நிலைமை மோசம். அந்த தேர்தலில் போட்டியிட்ட 1,828 வேட்பாளர்களில் 126 பேர் மட்டுமே பெண்கள். இவர்களில் பாஜகவை சேர்ந்த 9 பெண்கள், காங்கிரஸை சேர்ந்த 4 பெண்கள் என 13 பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏக்களாக குஜராத் சட்டசபைக்குள் நுழைந்தனர். போட்டியிட்ட 126 பேரில் 104 பேருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
33% இடஒதுக்கீடு
பாஜக பெண் எம்.எல்.ஏக்களாக இருக்கும் 9 பேரில் 5 பேருக்கு தற்போது அக்கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 4 பெண் எம்.எல்.ஏக்களில் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் பெண் வேட்பாளர் அமி ராவத் கூறுகையில், "சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பாஜக அதை ஏற்காது." என்றார்.