டெல்லியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை- மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது பாஜக!!
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சி புதியதாக தேர்தலை சந்திக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களைக் கைப்பற்றின.
ஆட்சி அமைக்க மொத்தம் 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை.
தேர்தலில் வென்ற 2 சுயேட்சைகள் தமது ஆதரவைத் தெரிவித்தாலும் கூட அது பாஜக ஆட்சியில் அமர போதுமானதாக இருக்காது. இதனால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.
ராஜினாமா செய்த கேஜ்ரிவால் அரசு
இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தலைமையில் அரசு அமைவதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்தது. இதனால் ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசு அமைந்தது. ஆனால் டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
ஜனாதிபதி ஆட்சி
அதன் பின்னர் அங்கு தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இதனிடையே அவ்வப்போது பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க முயல்வதும் அதை ஆம் ஆத்மி எதிர்ப்பதும் வழக்கமாகிவிட்டது.
புதியதாக தேர்தல் இல்லை
இதனால் டெல்லி சட்டசபைக்கு புதிதாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையமோ, டெல்லியில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் நவம்பர் 25-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அரசு அமைய வேண்டிய நெருக்கடி
இந்த அறிவிப்பு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் டெல்லியில் புதிய அரசு அமைக்க வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனாதிபதி கடிதம்- பாஜகவுக்கு அழைப்பு?
இந்நிலையில்தான் அதிக இடங்களைப் பெற்ற கட்சியானது ஆட்சி அமைப்பது குறித்து ஆராயுமாறு கவர்னர் நஜீப்துங்குக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் நஜீப்துங் எந்நேரத்திலும் அழைப்பு விடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பாஜக நிராகரிப்பு
ஆனால் இதை பாரதிய ஜனதா நிராகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, டெல்லியில் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். டெல்லி சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடைபெற்றாலும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை இடங்களையே பெறும் என்றார்.
டெல்லி பாஜக
டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாவும், வெங்கையா நாயுடு எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் என்றார். இதனால் டெல்லிக்கு சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றே கூறப்படுகிறது.