குஜராத் வெள்ளத்தில் குட்டியை வாயில் கவ்வி காப்பாற்ற பாடுபட்ட சிங்கம்
அகமதாபாத்: குஜராத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பெண் சிங்கம் ஒன்று தனது குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஓடும் காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலதத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்திலேயே சவுராஷ்டிரா பகுதி தான் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் வெள்ளத்திற்கு 80 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 சிங்கங்கள் பலியாகியுள்ளன, 10 சிங்கங்கள் மாயமாகியுள்ளன. இந்நிலையில் கிர் காட்டுப் பகுதியில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பெண் சிங்கம் ஒன்று தனது குட்டியை வாயில் கவ்வியபடி ஓடும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பாவ்நகர் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் இருந்து 5 சிங்கங்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இங்கோராலா கிராமத்தில் இருந்து 4 வயது பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் ஆகியவற்றின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர பிபார்டி கிராமத்தில் இருந்து 5 வயது சிங்கம் மற்றும் பிங்க்ளி கிராமத்தில் இருந்து ஒரு சிங்கம் ஆகியவற்றின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.