30 வருடத்தில் முதல்முறை.. பீகாரில் காங்கிரஸ் பெரிய பேரணி.. காந்தி மைதானத்தில் ராகுல் காந்தி!
தலைமையில் நடக்கும் இந்த பேரணி கடந்த 30 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய பேரணி என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம், பீகார் ஆகிய நான்கு மாநிலங்கள் மிக முக்கியமான மாநிலங்கள் ஆகும். இங்கு நிறைய லோக்சபா தொகுதிகள் இருப்பதால் இங்கு வெற்றிபெறவே பாஜகவும், காங்கிரசும் அதிகம் ஆசைப்படும்.
தற்போது பீகாரில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகி உள்ளது. லோக் சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதை முன்னிட்டு தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு பெரிய பேரணியை நடத்துகிறது.
என்ன பேரணி
காங்கிரஸ் கட்சி சார்பாக பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இந்த பேரணி நடத்தப்படுகிறது. 1990களின் தொடக்கத்தில் கடைசியாக காங்கிரஸ் அங்கு பேரணி, கூட்டங்களை நடத்தியது. அதன்பின் 30 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் காங்கிரஸ் மீண்டும் அங்கு பேரணி நடத்த உள்ளது. ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடக்கிறது.
கூட்டணி நடக்கிறது
காங்கிரஸ் மூலம் பீகாரில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பெரிய மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் முதல்முறை கூட்டணி உருவாக்கி இருக்கிறது. இதில் ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி), ராஷ்டிரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ளது. இதில் ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி சில நாட்களுக்கு முன்புதான் பாஜகவில் இருந்து பிரிந்து காங்கிரசுடன் இணைந்தது.
கலந்து கொள்கிறது
இந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த பேரணியில் இன்று கலந்து கொள்கிறார்கள். இந்த கட்சியை சேர்ந்த தொண்டர்களும் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக இந்த பேரணியில் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரிய பலம்
பீகாரில் பாஜக பெரிய பலம் வாய்ந்த கட்சி. இந்த நிலையில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க இந்த முறை இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி இருக்கிறது என்கிறார்கள். தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் நிர்வாகிகள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறார்கள். இரண்டு வாரமாக இந்த பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடுகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
2 லட்சம் பேர்
இந்த பேரணியில் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேரணி இன்று மாலை நடக்கிறது. சுமார் 4000 போலீசார் வரை தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
பீகார் எப்படி
பீகாரில் மொத்தம் 40 லோக் சபா இடங்கள் உள்ளது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. அங்கு பாஜக மிகவும் வலுவான கட்சியாகும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் அங்கு கூட்டணி உருவாக்கி உள்ளது. இந்த பலத்தை இன்று நிரூபிப்பதற்காக ராகுல் பேரணி நடத்துகிறார்.
தலைவர்கள் வருகை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மட்டுமில்லாமல் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் கூட இங்கு இருக்கிறார்கள். சட்டிஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.